'ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் ஆதார் விவரம் பெறப்படவில்லை - நீதிமன்றத்தில் திமுக முறையீடு
ஓரணியில் தமிழ்நாடு என்னும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின்போது , ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை என திமுக முறையீடு செய்துள்ளது.
திமுக ஓரணியில் தமிழ்நாடு என்னும் உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த பரப்புரையில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசி, வாக்களர் அடை விவரங்களை பெற்றுக்கொண்டு செல்போன் எண் மற்றும் ஓடிபி மூலம் உறுப்பினர்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களிடம் ஒடிபி பெற தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்து வரும் நிலையில், எதற்காக ஓடிபி கேட்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆதார் உள்ளிட விவரங்களை சேகரிக்கும் நிறுவனம் அதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? என்றும், சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.
இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் முறையீடு செய்தார். அவர், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP பெறுவதாக தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறி தடை உத்தரவை அதிமுகவினர் பெற்றுள்ளனர். ஆனால், உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறவே, செல்போன் எண் கேட்டு OTP பெறப்பட்டது. வேறு எந்த ஆவணமும் வாங்கவில்லை" என்றும் அவர் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


