ஆளுநரின் செயல் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது - திமுக எம்.பி., கனிமொழி கண்டனம்
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும் , கவலையையும் ஏற்படுத்துவதாக திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்திருக்கிறார்.
நீர் தேர்வை ரத்து செய்வதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் தமிழக அரசு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழுவும் ஆய்வு செய்து அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அந்த சட்ட மசோதாவும், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழு சம்பர்பித்த அறிக்கையும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றும் வலியுறுத்தினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என அனைத்துத் தரப்பிலும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்து வந்தது. இந்த சட்ட மசோதா குறித்து நீண்ட காலமாக மௌனம் காத்து வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று அதனை சமூக நீதிக்கு எதிராக இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக எம்.பி., கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் , “ சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
ஒரு மாநிலத்தின் தேவையையும், அதன் பிரச்சனைகளையும் களைய அந்த மாநிலத்தை ஆளும் அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிமை இல்லை என்று சொல்வதாகவே ஆளுநரின் செயல் அமைந்திருக்கிறது. மாநிலத்தின் உணர்வை மதிக்காமல் அதன் உரிமையைப் பறிக்கும் நிலை- ஜனநாயகத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது ” என்று பதிவிட்டுள்ளார்.