ரயில்வே பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

 
kanimozhi

ஆந்திர ரயில் விபத்து சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. பயணிகள் ரயில் மோதியதில்  பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறபடுகிறது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த நிலையில், ஆந்திர ரயில் விபத்து சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 
ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சோகமடைந்தேன். சமீபத்திய ஒரிசா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த இந்த சோகம், ரயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.