தியாகி இமானுவேல் சேகரனின் போராட்ட வாழ்வைப் போற்றுவோம் - கனிமொழி எம்.பி.

 
kanimozhi

தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வைப் போற்றுவோம் என திமுக எம்.பி. கனிமொழி குறிப்பிட்டுள்ளார். 

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான  இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விடுதலைப் போராட்ட வீரராக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக, அடக்குமுறைகளை எதிர்த்து களம் கண்ட போராளியாக தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வைப் போற்றுவோம். சமூக நல்லிணக்கம் காப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.