முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது

 
arivalayam

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முறையாக நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 28ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதேபோல் மழைக்கால கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டமானது சென்னை அண்ணா அறிவாலையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆளுநர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், அமலாக்கத்துறை சோதனை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.