நிலக்கரி சுரங்க விவகாரம் - நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

 
Parliament

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கி உள்ளார். 

மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.  இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்று உள்ளன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.  ஏற்கனவே, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய நிலக்கரை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கி உள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. புதிய நிலக்கரி சுரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை மந்திரி பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.