நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மத்திய அரசு மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதிமுக மாநாடு மதுரையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற நிலையில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் கருதி மதுரையில் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரை மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை 9 மணி அளவில் மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுக மாநாடு காரணமாக மதுரையில் மட்டும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.