46-ஆம் ஆண்டில் திமுக இளைஞரணி - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்..!!
இளைஞரணி எனும் தீரர் படையின் இன்றைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, “தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் இரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம் திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட நாள் இன்று!
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டலில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களால் உருவாக்கப்பட்ட இளைஞரணி எனும் தீரர் படையின் இன்றைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் இளைஞர்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் நம் இளைஞரணி, கழகத்தின் நாற்றங்காலாக திகழ்கிறது. களப் பணியிலும் - கொள்கை நெறியிலும் இளையச் சமுதாயத்தைத் தயார்படுத்த இளைஞரணி மேற்கொண்டு வரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டைக் காத்து நிற்கும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நம் கழக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்.தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, தலைவர் அவர்களிட்ட கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம்! தமிழ்நாடு வெல்லும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


