" பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!!
புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு விட்டது. மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றுக்கு இதுவரை 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தொற்று மேலும் பரவாமல் இருக்க , விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் இன்று மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவப் பிரிவு 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று 100க்கும் கீழ் உள்ளது; சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 100க்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஓமிக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது.
கடந்த சில தினங்களாக சென்னையில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்; அத்துடன் சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கமும் குறைந்துள்ளது. சென்னையில் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.