போதைப்பொருள் வழக்கு: பிரசாத் உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி..
சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைபொருள் வழக்கு தொடர்பாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமாரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் சிக்கினார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வாங்கியதாக பிரதீப் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனையடுத்து 2 நாட்கள் நடத்தப்பட்ட விசாராணைக்குப் பின்னர் நடிகர் கிருஷ்ணாவும் , வளசரவாக்கத்தைச் சேர்ந்த அவரது நண்பர் கெவின் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப்குமார், ஜான், கெவின் ஆகிய 4 பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீஸ் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


