"எந்த இடத்திலும் போதைப்பொருட்கள் கிடைக்காத நிலையை உருவாக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

 
premalatha vijayakanth

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனை ஆகிய அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டியது, தற்போதைய அரசின் தலையாயக் கடமை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை பொருள் கைப்பற்றுவது மிகவும் அதிகமாகி விட்டது. டாஸ்மாக் கடைமூலம் மக்களைப் போதைக்கு அடிமையாக்கபட்ட நிலையில், இந்தப் போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக வாங்கக்கூடிய ஒரு பொருளாக மாறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. நமது முதலமைச்சர் பேசும்போதெல்லாம் "போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவதே எனது லட்சியம், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்றெல்லாம் தேர்தலுக்கு முன்னால் பேசுவார்.இப்பொழுது அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்.

drug heroin

இதைப் பார்க்கும்பொழுது, சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இன்றைய திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் என ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருமே போதைக்கு அடிமையாகி, இந்தியாவிலேயே நான்காவது அதிக போதைப் பொருட்கள் விற்பனையாகின்ற ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டு வருகிறது குறிப்பாக இளைஞர்களைக் குறி வைத்து, நடத்தப்படும் இந்தப் போதை விற்பனை, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஒரு தலை குனிவு. மேலும் திமுக கட்சியைச் சார்ந்த, ஜவஹர் சாதிக் (திரைப்பட தயாரிப்பாளர்) தற்பொழுது 2000 கோடி போதை பொருட்களைக் கடத்தி இருப்பது, மிகவும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது இதைத் தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.இனி எந்த ஒரு இடத்திலும் போதைப் பொருட்கள் கிடைக்காத நிலையை உருவாக்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனையென இவை அனைத்தும் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டியது, தற்போதைய அரசின் தலையாயக் கடமை.

Premalatha

இல்லையென்றால், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்", என்பது போல் ஆகிவிடும், எனவே உடனடியாக முதலமைச்சரும் தமிழக அரசும் இதைப் பற்றிக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.