சென்னையில் நில அதிர்வு - மக்கள் அலறியடித்து வெளியேறினர்..
சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.. இந்நிலையில் மெட்ரோ பணிகளால் நில அதிர்வு உணரப்பட்டிருக்க கூடும் என்ற தகவலுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாசாலை லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். நிலஅதிர்வு தொடர்பாக ஆய்வு செய்யும் துறையை சேர்ந்த அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். மேலும் 3 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ பணிகளால் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்கிஸ அச்சத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில் பணியினால் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று, புகாருக்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.