‘என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’ - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

 
ramadoss ramadoss


தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.  

பாமகவில் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும், செயல்தலைவர் அன்புமணிக்கும் இடையே நிலவும் உட்கட்சி பூசல்தான், கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது.  தந்தைக்கும், மகனுக்குமான பனிப்போர், பாமக தொண்டர்களை திணறச் செய்து வருகிறது.   நிர்வாகிகள் பாதி பேர் ராமதாஸ் பக்கம், மீதமுள்ளவர்கள் அன்புமணி பக்கம் என ஏற்கனவே பாமக இரண்டாக பிளந்து கிடக்கிறது. தானே பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் என்றும், என் மூச்சு அடங்கும்வரை தான் அந்தப்பதவியில் நீடிப்பேன் என்றும் ராமதாஸ் கூறி வருகிறார்.  அன்புமணி செயல் தலைவராக மட்டுமெ நீடிப்பார் என்றும் தெரிவித்தார். அத்துடன்  பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில்,  அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நேற்று ஒருபடி மேலாகச் சென்று அன்புமணி தனது பெயருக்குப் பின்னால், என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், வேன்றுமென்றால் இனிஷியலாக முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று கூறினார்.

 அன்புமணி

மறுபக்கம் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில், தனக்கே பாமகவில் அதிகாரம்  இருப்பதாக அன்புமணி முறையிட்டு வருகிறார். கட்சியில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் தன் பக்கம்  இருப்பதாகவும், மொத்தத்தில் பாமகவில் தனக்கே முழு அதிகாரமும் இருப்பதாகவும் கூறி வருகிறார். இருவருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டி வரும் நிலையில் ராமதாஸ், அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  

தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டில் இந்தக் கருவி இருந்ததை 2 தினங்களுக்கு முன்புதான் கண்டுபிடித்ததாகவும்  தெரிவித்தார்.  என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். ஒட்டு கேட்கும் கருவியை யார் ? எதற்காக? பொருத்தினார்கள் என்பது தெரியவில்லை.  ஆனால் லண்டலில் இருந்து விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவியை வாங்கி பொருத்தி உள்ளதாக ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.