29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!!
நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 29 நடிகர் நடிகைகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடும் பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றனர். இதனால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் சட்டவிரோத சூதாட்ட செயலிகளை பல திரைப்பிரபலங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் இதுபோன்ற சட்டவிரோத விளம்பரங்களில் நடிப்பது குற்றம் என்றும், சமூகத்தை சீரழிக்கும் செயல் என்றும் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
மறுபக்கம், சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதிலும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு சட்டவிரோத செயல் மற்றும் பெட்டிங் செய்வதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளிப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர்த்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தெலங்கானாவை சேர்ந்த பனீந்திர சர்மா என்னும் தொழிலதிபர், சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள், கமிஷனாக பெரும் தொகையைப் பெறுவதாக புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சூதாட்ட செயலிகளில் விளம்பரப்படுத்தியதாக நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, ஸ்ரீமுகி, பிரணிதா, வர்ஷினி, வசந்தி, கிருஷ்ணன் மற்றும் சில யூ டியூபர்கள் என 29 பேர் மீது ஒன்றிய அரசின் ஐ.டி சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் மீது ஹைதராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அப்போதே பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் மன்னிப்பு வீடியோ வெளியிட்டிருந்தனர். 2017க்கு பிறகு ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று தெரிவித்த பிரகாஷ் ராஜ், இதுகுறித்து காவல்துறையிடம் விளக்கம் அளிப்பேன் என்றும் கூறியிருந்தார். இருந்தபோதிலும் தற்போது இந்த சூதாட்ட வழக்கில் திரைபிரபலங்கள், யூ டியூபர்கள் என 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


