செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டம் - மருத்துவர்களுடன் ஆலோசனை

 
senthil balaji senthil balaji

செந்தில் பாலாஜி உடல்நிலை பற்றிய காவேரி மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர்  செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ததில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து  நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையே ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கோரியிருந்த  அமலாக்கத்துறையின் மனுவை ஏற்று,   கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க  சென்னை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு வருகிற புதன்கிழமை (21-ந்தேதி) பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், செந்தில் பாலாஜி உடல்நிலை பற்றிய காவேரி மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இஎஸ்ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் செந்தில் பாலாஜி உடல்நிலை பற்றி அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர். மருத்துவர்கள் தரும் தகவலையடுத்து செந்தில்பாலாஜியிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.