"திட்டமிட்டு அதிமுகவினர் இல்லங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது" - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!

 
eps

உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதைப்பற்றி விசாரிக்க ஆளுநரிடம் மனு அளித்திருப்பதாகவும்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்திற்கு மத்தியில் அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு, தேர்தலில் தோல்வி, சசிகலா வருகை என பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளது. திமுக திட்டமிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்த ஏவிவிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

ttn

ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விதிமீறல் நடந்தது. அதுகுறித்து விசாரிக்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது. அதிமுகவினரின் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை தாமதமாக அறிவித்தனர். ஆனால் திமுகவினர் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர். நீதிமன்ற உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் எங்களைத்தான் சொல்லியுள்ளது என்றார். மேலும் சசிகலா குறித்து பேசிய அவர், சசிகலா அதிமுகவில் இல்லை. கட்சியில் இல்லாதவரை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.