'விடியா அரசை நம்பி ஏமாந்த மக்கள்' - நகைக்கடன் தொகையை உடனே வழங்க ஈபிஎஸ் கோரிக்கை!!

 
EPS

5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்  முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வரும், இப்போதைய முதலமைச்சரும், அவரது மகனும் மேடைதோறும் பேசினார்கள். அவர்களின் பேச்சை நம்பி சுமார் 48 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார்கள்.  ஆனால் இந்த விடியா  அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி புதிய நிபந்தனைகளை விதித்தது.  இந்த புதிய நிபந்தனைகளின் படி சுமார் 35 லட்சத்து 38 ஆயிரம் நபர்கள் நகை கடன் தள்ளுபடிக்கான  தகுதி பெறவில்லை என்றும் சுமார் 13 லட்சத்து 30 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகை கடன் தள்ளுபடி பெற தகுதியுள்ளவர்கள் என்றும் அவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது.

gold

இதையடுத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு நகை கடன் தள்ளுபடிக்கான தொகையினை இந்த அரசு வழங்கி இருக்க வேண்டும்.  ஆனால் அப்பணத்தை தராமல் அந்தந்த சங்கங்களில் உள்ள வைப்புநிதியை  நகை கடன் தள்ளுபடி பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கியதாக செய்திகள் கூறுகின்றன.இதனால் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்கள் உரம், விதை போன்ற விவசாய கடன்கள் வழங்குதல், அவசரகால நகை கடன் வழங்குதல், முதிர்ச்சியடைந்த வைப்பு நிதிக்கான தொகையை உரியவர்களுக்கு வழங்குதல் போன்ற அன்றாட பணிகளுக்கு கூட போதிய நிதி இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.  போதிய நிதி இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கும் ,தேவையற்ற சச்சரவுகள், வீண் விவாதங்கள் எழுந்துள்ளன.  

eps

கூட்டுறவு கடன் சங்கங்களை இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியது.  எனவே சங்க அலுவலர்கள் நகை கடன் தள்ளுபடிக்கான  தொகையை உடனடியாக வழங்க கோரி , இந்த விடியா அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் . ஆனால் இதுவரை இந்த அரசு கடன் தள்ளுபடிக்கான  தொகையினை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை.  5 பவுன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்த சுமார் 4 ஆயிரத்து 450 கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அச்சங்கங்கள் தள்ளுபடி செய்த தொகையை உடனடியாக வழங்கவும் , மேலும் அச்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த விடியா  அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.