கொடநாடு வழக்கு- நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்றும் ஆஜராகவில்லை

 
கொடநாடு ஈபிஎஸ்

மான நஷ்ட ஈடு வழக்கில் வேறு ஒரு தேதியில் ஆஜராக உள்ளதாக சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும் பங்கு இருக்கு! பகீர் வாக்குமூலம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டில்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல்,  சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும்,  தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற  எட்பபாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்ற தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தார். இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து  மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஜனவரி 30, 31ம் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 எடப்பாடி பழனிசாமி..

ஆனால் நேற்று வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. அதனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. ஆனால் இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு பட்டியலிட பட்டிருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில்  பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மனு நிலுவையில் உள்ளதாகவும், வேறு ஒரு தேதியில் ஆஜராக கேட்கப்பட்டுள்ளதாகவும், எனவே மாஸ்டர் நீதிமன்றத்தில் வேறு ஒரு தேதியில் ஆஜராக  இருப்பதாகவும், இன்று விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை சென்னை உயரநீதிமன்றதிற்கு திரும்ப அனுப்பி உத்தரவிட்டார்.