கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் மறைவு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 
eps

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் மகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. அம்மன் K. அர்ச்சுணன், M.L.A., அவர்களுடைய மகனும், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளருமான திரு. A. கோபாலகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.


பெற்ற மகனை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும். அந்த வகையில், பாசமிகு மகனை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்புச் சகோதரர் திரு. அம்மன் K. அர்ச்சுணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.