மாவட்ட ஆட்சியரையே கீழே தள்ளி விடும் அளவிற்கு அராஜக ஆட்சி - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

 
eps

மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை திமுக எம்.பி. நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு கீழே தள்ளி விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட விளையாட்டு & இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது, மாவட்ட ஆட்சியரேயே தள்ளி விட்டவர் மீது  ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை.  இதுவே அம்மாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி  நடைப் பெற்றிருக்குமா?  எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.