பாசனத்திற்கு நீர் இல்லாமல் கன்னியாகுமரி விவசாயிகளை தவிக்க விட்ட திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்

 
eps

நாகர்கோவில் மக்களை குடிநீருக்காக திண்டாடவும் வைக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் என்பது கேரளாவை ஒட்டி உள்ளதால், காலாகாலத்தில் மழை பெய்து அணைகள் நிரம்புவது வாடிக்கை. எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம நீரை தயாரிக்க முடியாது. தண்ணீர் என்பது இறைவன் நமக்கு அளித்த கொடை.
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பது ஔவையார் எழுதிய மூதுரை பாடல். ‘நீரின்றி அமையாது உலகு” என்பதற்கு இலக்கணமாக ஒரு காலத்தில் நீர் நிரம்பி காணப்படும் செழிப்பான பகுதியாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டம், இன்று விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும், பொதுமக்களுக்குத் தேவையான குடிதண்ணீர் கிடைக்காமலும் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களும் தூர் வாரப்பட்டு, உடைப்புகள் சரி செய்யப்பட்ட பின்னர்தான் தண்ணீர் திறந்துவிடப்படும். 

ஆனால், தற்போதுள்ள விடியா திமுக ஆட்சியில் இந்தக் கால்வாய்களில் எந்தவித தூர் வாரும் பணிகளும், உடைப்புகளை சரிசெய்யும் பணிகளும் நடைபெறவில்லை. தற்போதைய நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தற்போது 28.26 அடி அளவே தண்ணீர் உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் தற்போது 24.25 அடி அளவே தண்ணீர் உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணையில் தற்போது
11.31 அடியாக உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 2 அணையில் தற்போது 11.41 அடி தண்ணீர் உள்ளது. 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையில் தற்போது வெறும் 11.10 அடி அளவே தண்ணீர் உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையில் தற்போது வெறும் 3.28 அடி அளவே தண்ணீர் உள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் தற்போது (-) 13.60 அடி தண்ணீர் உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகள் கோதையாறு பாசனத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெற்று வருகின்றன.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர் வாரப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 375 குளங்கள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டதுடன், விவசாயத்திற்குப் போதுமான தண்ணீரும் சேமித்து வைக்கப்பட்டது. இதனால், விவசாயம் மற்றும் குடிதண்ணீர் வழங்குவதில் கன்னியாகுமரி மாவட்டம் தன்னிறைவு பெற்று விளங்கியது. எனது தலைமையிலான அம்மா ஆட்சியில், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் பாசனப் பணிகள் நடைபெற்றன. ஆனால், விடியா திமுக ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தவிதமான தூர் வாரும் பணிகளும் நடைபெறாததால், கடந்த ஆண்டு 14,250 ஏக்கரில் மட்டும் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு  இப்பரப்பு மேலும் குறைந்து, சுமார் 10,500 ஏக்கரில் மட்டும் பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3,750 ஏக்கர் பாசனப் பரப்பு குறைந்துள்ளது. 7 பிரதான கால்வாய்களில் தோவாளை சாணல், நாஞ்சில் புத்தனார் சாணல், பத்மநாபபுரம் புத்தனார் சாணல், அனந்தனார் சாணல் ஆகிய 4 சாணல்களில் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கால்வாய்களில் முறையாக தூர் வாரப்படாததால் திறக்கப்பட்ட தண்ணீரும் கடைமடை வரை செல்லவில்லை. இதனால், நேரடியாக கால்வாய் மூலம் பயன்பெறும் பாசன நிலங்கள் நீரின்றி கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோதையாறு நீர் பாசனத் திட்டத்தின் மூலம் 40 அடி மற்றும் அதற்குமேல் அணையில் தண்ணீர் இருந்தால் மட்டுமே ராதாபுரத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இந்த விதியினை முறையாக கடைபிடித்து, நீர்நிலைகளை நிரப்பி விவசாயிகள் நலனை பாதுகாப்பது அரசின் கடமையாகும். இதற்கு மாறாக, விதிமுறைகளை கடைபிடிக்காமல் நடப்பாண்டில் ராதாபுரத்திற்கு ஜூன் மாதம் 1-ஆம் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு, மீண்டும் அரைமணி நேரத்தில் மூடப்பட்டது. இவ்வாறு, விதிகளை மீறி அடிக்கடி செயல்படுவதால், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியான ராதாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாயப் பெருமக்களும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

eps

நாகர்கோவில் மாநகருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், பொதுமக்களுக்கு குறைபாடின்றி குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. கோடை காலத்திலும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்ற அவல நிலை இருப்பதால், மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் 22.09.2018 அன்று நடைபெற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நான் கலந்துகொண்ட போது, நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டேன். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க, புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு, அம்ருத் திட்டத்தின் மூலம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, எங்கள் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், விடியா திமுக அரசு பொறுப்பேற்று 27 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பணிகள் நிறைவு பெறவில்லை.

அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் இந்த விடியா திமுக அரசு, இந்தத் திட்டத்திற்கும் மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இனியாவது குடிநீர் பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து, நாள்தோறும் நாகர்கோவில் மக்களுக்கு குடிதண்ணீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
நாஞ்சில் நாடு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், இன்றைக்கு நீரின்றி பயிர்கள் எல்லாம் கருகி, பாடுபட்டு வேளாண் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் கண்கலங்கும் துயரத்தை விடியா திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக மாவட்டம் முழுவதும் அனைத்து கால்வாய்கள் மற்றும் குளங்களையும் தூர் வாரி குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கி, விவசாயிகளின் நீர் ஆதாரத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் பெருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.