அதிமுக வார்டு உறுப்பினர்களை தாக்கிய திமுக வார்டு உறுப்பினர்கள் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

 
eps

மேட்டுப்பாளையம் நகர மன்றக் கூட்டத்தில் அதிமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக வார்டு உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசின் காவல் துறைக்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டுப்பாளையத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கழக வார்டு உறுப்பினர்கள், மேட்டுப்பாளையம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கேள்வி எழுப்புவதற்காக தீர்மானித்திருந்த நிலையில், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக கழக வார்டு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்ததைக் கண்டித்து 31.10.2023 முதல் நகர மன்றத்தில், 8 கழக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். 

இந்நிலையில் நேற்று (2.11.2023) உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய கழக நகர மன்ற வார்டு உறுப்பினர்களையும், இவர்களை பார்வையிடச் சென்ற கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. A.K. செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P.R.G. அருண்குமார், M.L.A., உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்களையும் கைது செய்த திமுக-வின் ஏவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


மேட்டுப்பாளையம் நகர மன்ற வளாகத்திற்குள்ளேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது, மேல் நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசின் காவல் துறைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.