கள்ளசாராய விற்பனை குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரியும் - எடப்பாடி பழனிசாமி

 
EPS

திமுக ஆட்சியில் ரவுடிகள், திருடர்கள் காவல்துறையை கண்டு பயப்படுவது இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட புகார்களை  வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.  இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.  அப்போது சட்டம்-ஒழுங்கு, போலி மது, விஷ சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.   

ஆளுநரை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை பரிசீலனை செய்வதாக ஆளுநர் கூறியிருக்கிறார். தினந்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். விஷச்சாராய உயிரிழப்புகள், விஏஓ வெட்டிக்கொலை உள்ளிட்டவற்றை எடுத்து ஆளுநரிடம் கூறியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன.  போலி மதுபானம் குடித்து உயிரிழந்தார்கள் என்ற செய்தி வெளியே வரக்கூடாது என அரசு முயற்சி செய்கிறது. போலி மதுபான விற்பனை, கள்ளசாராய விற்பனை குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரியும். போலி மதுபான விற்பனை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. போலி மதுபான விற்பனை வருமானம் மேலிடத்திற்கு செல்கிறது. நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் திமுக அரசில் பாதிக்கப்படுகின்றனர்.  அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை. உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. திமுக ஆட்சியில் ரவுடிகள், திருடர்கள் காவல்துறையை கண்டு பயப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.