12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை - எடப்பாடி பழனிசாமி

 
EPS

எதிர்க்கட்சியாக இருந்தபோது 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சியான பின்னர் அதனை எதிர்ப்பது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது: 12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை. 12 மணி நேர வேலை என்பது மனித வாழ்க்கைக்கு சரிவராது. ஸ்விட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனித வாழ்க்கை. 12 மணிநேர வேலை மசோதாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  எதிர்க்கட்சியாக இருந்தபோது 12 மணி நேர வேலை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; அது தான் ஸ்டாலினின் பண்பாடு.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 30 ஆயிரம் கோடி தொடர்பான அந்த ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம். இவ்வாறு கூறினார்.