மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 
eps

இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.  கவன ஈர்ப்பு விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம், அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். போதைப் பொருளை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர். மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை. எவ்வளவு முக்கிய பிரச்சினையாக இருந்தாலும் துணை முதல்வரின் பதிலுரை தடை பட கூடாது என நினைக்கின்றனர் என கூறினார்.