நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரலாம் - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

 
EPS

வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தாலும் வரலாம், அப்படி வந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காரில் சேலம் சென்றார். சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அவைகளை எல்லாம் சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுப்போம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும். 

அ.தி.மு.க.வை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும்.  அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அ.தி.மு.க.விற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம். இவ்வாறு பேசினார்.