ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டதால் அவரே பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டவிரோதமாக நடைபெறுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர் அணிந்துகொள்ளும் கண்ணாடி, தொப்பி உள்ளிட்டவற்றை பரிசளித்த நிலையில், அவர் அதனை அணிந்துகொண்டு எம்.ஜி.ஆர். போல காட்சியளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.