குடும்ப தகராறில் மாமியாரை கிணற்றில் தூக்கி வீசிய மருமகன்!

 
கிணற்றில் விழுந்து தற்கொலை கிணற்றில் விழுந்து தற்கொலை

நரிக்குடி அருகே குடும்ப தகராறில் மாமியாரை கிணற்றில் தூக்கி வீசிய மருமகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிணற்றில் குதித்து தற்கொலை


விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் மாரிமுத்து (29). இவர் மானூர் ஒத்தவீடு பகுதியை சேர்ந்த வீரேஷ் – இருளாயி தம்பதியினரின் மகளான சத்யாவை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் தற்போது கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். சத்யா தன் தாயான இருளாயி (70) உடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு குழந்தைகளில் ஒருவரை இருளாயி பராமரித்து வந்தார்.

நேற்று காலை தனது மாமியாரான இருளாயி வீட்டுக்கு சென்ற மாரிமுத்து தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இருளாயி குழந்தையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது மாமியார் இருளாயியை வயதான மூதாட்டி என்றும் பார்க்காமல் திடீரென அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் இரக்கமின்றி தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி இருளாயி தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில் உயிருக்கு போராடியவரை அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி சுமார் அரை மணி நேரம் போராடி மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் இருளாயி திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.