#ELECTION BREAKING : பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு..!

 
1

பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இம்முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் பிரதான அணிகளாக உள்ளன. “இந்தியா” கூட்டணியில் பெரும் பலமாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்தார்.

அவரது திடீர் முடிவு “இந்தியா” கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் பீகாரில் NDA கூட்டணி கட்சிகளுக்கு இடையே அண்மையில் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 5 தொகுதிகளிலும், ஜித்தன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா(செக்யூலர்) கட்சி ஒரு தொகுதியிலும், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. இதில், சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது 

பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 5 இடங்களிலும் போட்டி! சிபிஐஎம்எல் - 3; சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு.