சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது - முதல்வர் ஸ்டாலின் தாக்கு..!!
சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை போல் தேர்தல் ஆணையம் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் பேரணியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, “சமூகநீதி - மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். தலைவர் கலைஞரும் லாலு பிரசாத்தும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தபோதும் பாஜகவுக்கு அஞ்சாமல் அரசியல் செய்ததன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் லாலு பிரசாத்.
ராகுல் காந்தி , தேஜஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தை காக்க , மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்றிணைந்துள்ளீர்கள். உங்கள் இருவரின் நட்பு அரசியலைக் கடந்து உடன்பிறப்புகள் போன்றது ; பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரப் போவது இந்த நட்புதான். பிகாரில் பாரதிய ஜனதா கட்சியின் துரோக அரசியல் தோற்கப்போகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாக உள்ளது. அதனால் தான் பாஜக அதனை தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 65 லட்சம் வாக்காளர்களை சொந்த மண்ணில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதத்தை தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. பிஹாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது.

தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி இருக்கிறார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் ராகுல் காந்தி பயப்பட மாட்டார். ராகுலின் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட தேர்தல் ஆணையத்தால் பதில் சொல்ல முடியவில்லை. அவரது வார்த்தையிலும் பார்வையிலும் எப்போதும் பயம் இருக்காது. இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல் காந்தி இறந்து வருகிறார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்.
400 இடங்கள் என கனவு கண்ட பாஜகவை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி தான். மெஜாரிட்டி என ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்பதை பிகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவை அவரைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் ராகுல் காந்தியின் பலம்; இதுதான் தேஜஸ்வியின் பலம்; இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதை எதிர்த்து பிகார் போர் குரலை எழுப்பி இருக்கிறது என்பதுதான் வரலாறு” என்று கூறினார்


