சென்னையில் மின்சார பேருந்துகள் சேவை தொடக்கம்..!!
சென்னையில் மின்சார தாழ்தள பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், சென்னையில் மாசு கட்டுப்பாட்டை கனிசமாக குறைக்கும் வகையிலும் மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டது. அதன்படி, உலக வங்கியின் உதவியுடன் 1,225 மின்சார தாழ்தள பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘ஓம் குளோபல் மொபிலிட்டி’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவற்றில் 225 பேருந்துகள் ஏசி வசதியுடனும், 400 பேருந்துகள் ஏ.சி வசதி அல்லாத சாதாரன தாழ்தள பேருந்துகள் ஆகும்.

இந்த 625 பேருந்துகளில் இன்று முதல்கட்டமாக 120 மின்சார பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை வியாசர்பாடியில் ரூ. 47.50 கோடி செலவில் மின்சார பேருந்து பணிமனை கட்டப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பணிமனையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சார தாழ்தள பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் முதல்கட்டமாக ரூ.207 கோடி செலவில் வாங்கப்பட்ட 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த மின்சார பேருந்துகளின் 39 இருக்கைகளிலும் சீட் பெல்ட் வசதி உள்ளது. அத்துடன் ஒவ்வொரு இருக்கைக்கு கீழும் சார்ஜிங் போர்ட், 13 இடங்களில் அவசரக்கால பொத்தான்கள், முதியோ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இருக்கை, சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு சாய்வுப் பலகை, பேருந்து நிறுத்தத்தை அறிய உள்ளே எல்.இ.டி டிஸ்பிளே உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. அத்துடன் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட தனி கேமரா உள்பட 7 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


