சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி!
சத்தியமங்கலம் அருகே வீட்டில் மின்இணைப்பு வழங்கியபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (44). எலெக்ட்ரிசியன். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெருமாள் தினமும் காலை எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் காலை பெருமாள் சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்இணைப்பு வழங்கும் வேலைக்காக சென்று இருந்தார்.
அங்கு, யு.பி.எஸ்.சில் ஏற்பட்ட பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பெருமாளை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் மயக்கமடைந்தார். இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.