தமிழகத்தில் நேற்று புதிய உச்சம் தொட்ட மின் நுகர்வு - செந்தில் பாலாஜி..
தமிழ்நாட்டில் மின் நுகர்வு நேற்று புதிய உச்சத்தை எட்டியதாகவும், எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஏசி, ஏர்கூலர், குளிர்சாதன பெட்டிகள் போன்ற பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் மின் நுகர்வும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இருப்பினும் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 19,087 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில், “மீண்டும் ஓர் சாதனை. தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 19/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 18/04/2023ல், 41.30 கோடி யூனிட்கள் ஆகும். மெகாவாட் அளவில், நேற்று 19/04/2023 மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 19,087 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 18/04/2023ல் 18,882 MW ஆகும்.” என்று கூறியுள்ளார்.