சென்னையில் மின் திருட்டு குறித்த தகவல்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம்...!

 
EB

சென்னை கே.கே.நகர் கோட்டத்தில் 5 மின்சார திருட்டு வழக்குகள் கண்டறியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அமலாக்க கோட்டத்தால் 04.10.2023 அன்று நடத்தப்பட்ட கோட்ட அளவிலான திடீர் சோதனையின் போது, சென்னை மத்திய, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய அமலாக்க பிரிவுகள் கே.கே.நகர் கோட்டத்தில் 5 மின்சார திருட்டு வழக்குகளை கண்டறிந்துள்ளன. திருடப்பட்ட மின்சாரத்தால் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக நுகர்வோர்கள் மீது ரூ.7,74,701/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வழக்கை முடித்து வைக்க விரும்பி ரூ.28,000/- அபராதம் செலுத்தியுள்ளனர். இதனால், காவல் நிலையங்களில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. மொத்தம் ரூ.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


மின்சாரத் திருட்டு குறித்த தகவல்களை சென்னை அமலாக்க கோட்டத்தின் செயற்பொறியாளர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு 9445857591 என்ற கைபேசி எண்ணில் தெரிவிக்கவும். இணையம் வழியாகவும் புகார் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.