தேர்தலுக்கு ஆயத்தமாகும் தமிழகம்- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி
தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரநிதிகள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பிரநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது.
இதன்படி பிரநிதிகள் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 8.45 மணி முதல் மாலை 7.00 மணிவரை இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க வேண்டும். முதல் நிலை சரிபார்ப்பு பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் நிலை சரிபார்ப்பு பணியில் பழுதானது என கண்டறியப்படும் இயந்திரங்கள் பெங்களுரு பெல் நிறுவனத்திற்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


