உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா - ஈபிஎஸ்-க்கு அழைப்பு
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாளை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் தர்பார் ஹாலில் நாளை காலை 9:30 மணி அளவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 400 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.