குடிநீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்திடுக - கட்சியினருக்கு இபிஎஸ் ரெக்வஸ்ட்..

 
eps

தாகம் தணிக்க நீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்குமாறு கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கு தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் துடிப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன்.

குடிநீர் பந்தல்

தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை, கழக நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்று கூறியுள்ளார்.