"ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல்" - தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!!

 
eps

ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022 புத்தாண்டு பிறந்தது; தை பிறந்தது; வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகள் நெல் மணிகளை அறுவடை செய்து,  தங்களது உழைப்பிற்கான பயனைப் பெற வேண்டி இந்த நேரத்தில் இந்த அரசு ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது விவசாயிகளைப் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

paddy

இதன் படி கணினி கேட்கும் விவரங்களை விவசாயிகளின் பதிவு செய்ய வேண்டும்.  பிறகு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் . அவர்கள் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகு தான்,  நெல் கொள்முதல் செய்வதற்கான தேதி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.பெரும்பான்மையான அப்பாவி  விவசாயிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது என்றால் என்னவென்று தெரியாது.  இவர்களுக்கு மற்றவர்களது உதவி தேவை.  மேலும் வருவாய் துறை அலுவலர்களின் ஒப்புதல் தேவை.  

eps

இதுபோன்ற தாமதங்களினால் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் பாழாகி தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.  இது போன்ற அரசின் நடவடிக்கைகளால் இடைத்தரகர்களிடம் தங்களது உழைப்பில் கிடைக்கப்பெற்ற நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு விற்று,  சிக்கி சீரழிந்து விடுவோமோ என்ற பீதியில் உறைந்து போயுள்ளனர்.  ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே  இந்த அறிவிப்பை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில், ஆங்காங்கே  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

paddy

சென்ற ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து நெற்கதிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.  இனி வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் குறைந்தது சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயிகளின் உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைத்தே ஆகவேண்டும்.  ஆகவே ஆன்லைன் பதிவு கட்டாயமாக்காமல் ஏற்கனவே உள்ள எளிய நடைமுறையின்படி விவசாயிகள் , தங்களது உழைப்புக்கு உண்டான பலனை பெறுவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்கவும், தார்ப்பாய், சாக்கு, சணல் போன்ற பொருட்களை அதிக அளவில் இருப்பு வைப்பதோடு,  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவு,  பணியாட்களை நியமித்து வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த விடியா திமுக  அரசை வலியுறுத்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.