சென்னைக்கு "வந்தே பாரத்" ரயிலில் பயணித்த ஈபிஎஸ்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு "வந்தே பாரத்" ரயிலில் பயணித்தார்.
இந்தியாவின் 14 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை மற்றும் கோவை இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை - சென்னை ஆகிய இரு நகரங்களுக்கும் இடையே ரயில் சேவை 7.30 மணி நேரங்களாக இருந்து வந்தது. தற்போது வந்தே பாரத் சேவை மூலம் 5 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. சேலம் ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று நிலையங்கள் மட்டுமே இந்த ரயில் நின்று செல்கிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். பெரும்பாலும் தனது நான்கு சக்கர வாகனத்தில் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் அவர், இன்று காலை கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணத்தில் மக்களோடு மக்களாக எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த நிலையில் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.