ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்

 
Erode East

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Erode East

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் சிவகுமார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளை நாளை மாலைக்குள் கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் வெளிமாவட்டங்களை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் நாளை மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு கூறினார்.