கொரோனாவில் இருந்து மீண்டார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.. நலமுடன் இருப்பதாக தகவல்..
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்; விரைவில் வீடு திரும்புவார் என்றும் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் வி. ஆர். சிவராமன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றஉறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கடந்த 15 ஆம் தேதி சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான கொரோனா தொற்றுடன், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே XBB வகை கொரோனா பாதிப்புடன், நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேநேரம் இன்று காலை மருத்துவமனையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும், இளங்கோவம் விரைவில் வீடு திரும்புவார் என காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பகல் 11.00 மணி அளவில் அமெட் பல்கலைக்கழக வேந்தரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான டாக்டர் நாசே ஜே.இராமச்சந்திரன் மருத்துவமனையில் ஈவிகேஎஸ்.இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல் நலம் சம்மந்தமாக நேரிலும், தொலைபேசி மூலமும் மிகுந்த அக்கறையோடும், ஆர்வமுடனும் கேட்கும் காங்கிரஸ் பேரியக்க சகோதர, சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பூரண நலத்துடன், தன்மானத்தலைவராக, அவருக்கே உரிய பாணியில் விரைவில் மக்களை சந்திப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.