மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்- அரசிதழில் வெளியீடு

 
assembly assembly

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Image

நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. தன்படி, பதவிக் காலம் நிறைவு பெற்ற ( 5ம் தேதியுடன்) 28 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம்  உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொள்ளப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இந்த அரசாணைகளை அரசிதழில்  வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, இது தொடர்பான ஆட்சேபனைகளை 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதன்படி, முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரி அனுப்பலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் அனைத்தும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.