விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூரில் சிவகாசி அருகே விசுவநத்தத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று சர வெடிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. இன்று மாலை வழக்கமாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுகளை ஆலையின் பின் பகுதியில் உள்ள குழியில் போட்டு எரிக்கும் பணியில் ஆறுமுகம், போர்மேன் தெய்வேந்திரன், தொழிலாளி குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரத்த்ஐச் சேர்ந்த ஆறுமுகம் (50)என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயமடைந்த சிவகாசி அருகே விசுவநத்தத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன்(33) என்பவர் மதுரை அரசு மருத்துவமனையிலும், அம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்த குபேந்திரன்(38) என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்