கிணறு வெட்டும்போது வெடி வெடித்து விபத்து : ஆலங்குளத்தில் 3 பேர் பலி..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வெடி வெடித்ததில் 3 தொழிலாளிகள் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம் அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்ட திட்டமிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதற்கான பணியை தொடங்கினார். கிணறு வெட்டுவதற்கான ஒப்பந்த பணியை, காலத்திடம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் கொடுத்திருக்கிறார். அவர் தனது ஊழியர்களுடன் கடந்த 10 நாள்களாக கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதுநாள் வரை மண் பகுதியை தோண்டி எடுத்த தொழிலாளர்கள் , இன்று காலை (வியாழக்கிழமை) காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக டெட்டனேட்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த்(21) தொழிலாளி நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த 4 பேரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஆசிர் சாம்சன் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஆனையப்ப புரத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் (50) என்பவர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.