போலி டாக்டர் பட்டம்.. போலீஸில் புகார் - அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்..
அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நில்லையில் அது போலி என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் , செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கத்தை பயன்படுத்தினர். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம்; இதுபோன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம்”என்று தெரிவித்தார்.
மேலும், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், அத்துடன் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தையும் ஏமாற்றியுள்ளனர் என்றும் துணைவேந்தர் கூறினார். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், அண்ணா பல்கலை. பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பொதுவாக அனுமதி கொடுப்போம் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். தனியார் அமைப்பு மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் எனவும் அவர் உறுதிபட கூறினார்.