கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் - 100க்கும் மேற்பட்டோர் கைது

 
protest

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகை மாவட்டம் கீழ்வேளூரில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நிலுவையில் உள்ள அளவையும் சேர்த்து, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும், அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என்ன தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில் 3,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. 

இந்த நிலையில், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை கண்டித்தும், காவிரி நீரை பெற்று தர உரிய அழுத்தம் கொடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்  நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகையில் இருந்து திருச்சிக்கு சென்ற ரயிலை மறிக்க முயன்ற நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.