கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

 
ழ் ழ்

கோவை நாச்சிபாளையம் அருகே அரசு பள்ளி பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மதுக்கரை அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மனைவி பத்மா (53). இவருக்கு ராஜராஜேஸ்வரி என்ற மகள் மற்றும் லட்சுமி நாராயணன் என்ற கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் மகன் உள்ளனர். மேலும் பத்மா வழுக்குப்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.  இந்த நிலையில் நேற்று வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தில் பத்மா பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மாலை வீட்டிற்கு வரவில்லை, இரவு முழுவதும் வராததால் அவரது குடும்பத்தார் மதுக்கரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.  புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நாச்சிபாளையம் வழுக்குப்பாறை சாலையில் ஓடை அருகே உள்ள காலி இடத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணையை துவங்கினர். அதில் சடலமாக மீட்கப்பட்டது மாயமான அரசு பள்ளி ஆசிரியை பத்மா என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் மோப்பநாய் உதவியுடன் அங்கு ஆய்வு மேற்கொண்டு,  தடையவியல் துறையினர் மூலம்  சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.