சிறை கைதிகள் திருந்தி வாழ நிதி உதவி வழங்கினார் முதல்வர்!!

 
ttn

சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சிறையிலிருந்து முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்கிட 3 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.5.2023) சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் சிறையிலிருந்து முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சுயதொழில் தொடங்கிட 3 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

stalin

இந்திய சிறைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா நிறுவனமாக, 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை பெற்று வருபவர்களின் நல்வாழ்விற்காக, அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுத்து, அவர்கள் சமூகத்தில் நேர்மையாக வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில், சுயதொழில் தொடங்கிட தேவையான நிதி உதவிகளை வழங்குவதே இச்சங்கத்தின் குறிக்கோளாகும். சிறை மீண்டோர் நலச்சங்கம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

mk stalin

அந்த வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, அவர்கள் கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட 3 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசோலைகளை வழங்கினார். இதன்மூலம், விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகள் சுயதொழில் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சீரிய மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்கிட வழிவகுக்கும்.