நிதிநிறுவன மோசடி வழக்கு.. தேவநாதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

 
தேவநாதன் யாதவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் தேவநாதன் யாதவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில்  கைதான தேவநாதன் யாதவை  ஜாமீனில் விடுவிக்க முடியாது எனக்கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்   தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  

மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனரும்,  பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிறையில் உள்ள தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் இரண்டுமுறை தள்ளுபடி செய்துள்ளது.  இந்நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். 

தேவநாதன்
இந்த வழக்கு இன்று  நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது   புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை  4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி. முனியப்பராஜ் தெரிவித்தார். மேலும்,   தேவநாதன் இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஆவதற்கு முன்பு நிதிநிலைமையை சீராக இருந்தது என்றும்,  ஆனால் அவர் இயக்குனர் ஆன பின்பு மோசமாகிவிட்டது என்றும்  பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்  சங்கத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார்.  இந்த வாதங்களை கேட்ட நீதிபதி,  தேவநாதன் யாதவை  ஜாமீனில் விடுவிக்க முடியாது எனக்கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.