கன்டெய்னர் லாரியில் தீ விபத்து - ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

 
fire

திருவள்ளூர் அருகே வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 
 
திருவள்ளூர் அருகே போலிவாக்கம் பகுதியில் டெலிவரி என்னும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி ரூபாய் பொருட்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு செல்வதற்காக லாரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னரில் இருந்து திடீரென புகைமூட்டம் கிளம்பியுள்ளது. உடனடியாக லாரியை விட்டு கீழே இறங்கிய ஓட்டுநர் உடனடியாக காவல் துறைக்கும், டெலிவரி நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மணவாளநகர் காவல்துறையினர்  லாரியை திறந்து பார்த்தபோது உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மளமளவென கண்டைனர் முழுவதும் தீ பற்றியதால்  திருவூர்  மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த  ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. சம்பவ இடத்தில் திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் திருவள்ளூர் தாலுகா ஆய்வாளர்   ஆய்வு செய்து செய்தனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்